வியாழன், 9 ஜூலை, 2020

உயிர் பாசம்.

பனையோலை தடுக்கில் பிரண்டு படுக்க பக்கத்து செத்தையில் கீழ் வரிச்சு தடியில் குட்டி நாகம் தன் தலையை தேய்க்கரண்டி அளவு தூக்கி படம் எடுத்தார் அழகாக,என்ன தான் அவர் அழகாக இருத்தாலும் பாம்பு என்றால் வேர்க்காமல் இருக்குமா ஐயோ என அலறல் அடக்கமுன் அப்பாச்சி சின்ன தடியால் ஆளை தூக்கி போடா நாகதம்பிரானே இந்த பக்கமா என கோயில் உள்ள திசை நோக்கி ஆளை தூக்கி போட்டா...

எந்த உயிரையும் அடிச்சு கொல்லும் அளவுக்கு கிராமங்களில் மக்கள் மனம் இருப்பதில்லை எதோ வழிதவறி வந்திருக்கும் கலைச்சு விடு என்பதுதான் அவர்களின் ஆக கூடிய வன்முறை சொல்.

அதிலும் கோயிலுக்கு பக்கதில் வீடு இருத்தா பாம்புக்கு எல்லாம் தனி மரியாதை பிணைத்து ஆடும் சாரையும்,மூர்க்கனும் தடிகொண்டு போக முன்னம் கத்தி சத்தம் போட்டு அடிக்க கூடாது ஒன்று செத்தா மற்றது பழிவாங்கும் என்னும் கதையை சொல்லி அவைகளை பாதுகாத்து விடுவார்கள்,வெள்ளை துணி போட்டு எடுத்து பெட்டியில் வைச்சா காசு வரும் என்பதெல்லாம் வேறு கதை ...

எடுப்பாக திரியும் கோழிசேவல் நாலுவீட்டு வேலி தாண்டி வந்து கன்னி கோழியை கலைச்சு திரிவார்,பார் ஆளை கொண்டை பூவும் கலரும் மாப்பிளை கணக்கா என தன் வீட்டு சேவலாக இல்லாது விட்டாலும் அதை ரசிக்கும் மனம் முன்னோர்களிடம் கொட்டி கிடத்தது...

எப்பொழுதும் மாமி,அத்தை வீடுகள் போனால் மருமக்களுக்கு என தனி கவனிப்பு எல்லாம் இருக்கும் அங்க பெண் எடுக்குறமோ இல்லையோ நம்ம மருமகன் என சொல்லும் மாமியின் குரலில் இருக்கும் அந்த பாச உணர்வுக்கு மொழிகள் இல்லை சொல்ல..

எப்பொழுதும் சக மனிதன் உறவு என்பதற்கு அப்பால் சென்று மிருகங்கள் மீதும் அலாதியான அன்பை திகட்ட கொடுத்த அந்த காலம் இனி வருமா என்னும் மீள் நினைவுகளுடன் இன்று சிமாட் போனில் கலைச்சு கலைச்சு சுடுபடும் விளையாட்டை விளையாடும் பிள்ளையை பார்த்தபடி இருத்து யோசிக்க வேண்டிய நிலையில் வாழ்க்கை காற்றில் மிதக்கும் பலூன் ஆகி போகிறது திசைகள் இன்றி.

#ஒக்கட்டி

லுமாலா சைக்கில்காரி.

அந்த லுமாலா சைக்கிள் ஒரு மையில் தூரம் வரும் போது தெரிந்துவிடும் அவள் வருவது கிறீஸ் போடாத செயினின் சத்தமும் செயின் கவரில் தேய்க்கும் பெடலும் அதுக்கு சாட்சியாக இருக்கும்,கொஞ்சம் கிட்டவாக வந்து விலகி போகும்வரை அவள் சைக்கிள் மிதிப்பதை நிறுத்தியிருப்பாள் அதன் சத்தம் அவளுக்கு பிடித்திருத்தாலும் ரோட்டுக்கரையில் சும்மா நிண்டு மிலாந்தும் பெடியலுக்கு சிரிப்பை கொடுக்கும் போதாதற்கு அவளை ஒரு முறைக்கு இருமுறை திரும்பி பார்க்கவும் பண்ணும்...

தன் தொப்பியை நெற்றியின் கீழ்வரை இழுத்து விட்டு முன்சில்லை மட்டும் பார்த்தடி காற்றில் எழும் சட்டையை ஒருகையால் அழுத்தியபடி அவள் லாபகமாக வெட்டி ஓடும் அழகை மட்டும் எழுதினால் தனி பக்கம் வேணும் என்பதால் தவிர்த்து...

ஒவ்வெரு சனி,ஞாயிறும் ரீயூசனுக்கு அவள் வந்து போவது என்பது அந்த வீதியில் பலருக்கு நேரம் கணிக்க உதவியாக கூட இருத்திருக்கு கீச்சிட்டான் கிழக்க போயிட்டா மணி ஐந்து ஆகியிருக்கும் என்பது அந்த வீதியில் மில்லில் வேலை செய்யும் ஐயாக்கு கூட தெரியும்...

சைக்கிள் மட்டுதான் உறுதியற்று இருந்தது ஆனால் அவள் மனம் என்பது உறுதியாக இருந்தது படிக்கனும் ஓ/எல் எப்படியும் பாஸ் பண்ணனும் அதன் பின் எங்காவது ஒரு இடத்தில் வேலைக்கு போகலாம் எல்லாத்துக்கும் உதவும்,வருவாய்துறைக்கு சைக்கிள் டிக்கெட் கிழிக்கும் வேலைக்கு கூட ஓ/எல் சித்தி வேணும் என ரீயூசன் வாத்தி அடிக்கடி சொல்வது நினைவில் வந்து போகும்...

இந்த முறை ஊருக்கு போகும் போது அதே மில் ஐயாவிடன் பேசிட்டு இருக்கும் போது கீச்சிட்டான் மேற்க போகுது மணி ஐந்து என சிரிச்சார் அவள் தன் சூட்டி மோட்டார் சைக்கிளில் கோன் அடிச்சு சிரித்தபடி போனாள்,பதினைத்து வருடம் பின் பார்த்த முகம் அன்று தொப்பி மறைத்திருந்தது இன்று ஹெல்மெட் மறைத்திருக்கு அவளா ஐயா இவள் என ஆச்சரியமாக பார்த்து நின்றேன் ..

அப்ப ஐயா சொன்னார் அவள் தான் அந்த மக்கள் வங்கியின் முகாமையாளர் தம்பி என.👍

#ஒக்கட்டி